மேற்குலகத்தின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள நல்லாட்சி அரசாங்கம் மோசடிகளைக் கண்டுபிடிப்பதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றது. காலவோட்டத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொலைக்காட்சி நாடகம் போன்றதாகவே இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொண்ட அவர், மக்களிடையே எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை அரசியல்வாதிகளிடையே அரசியல் ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்ற எண்ணமில்லையென சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்காக இதயசுத்தியுடன் ஏதாவது செய்வதற்காகவே விக்கினேஸ்வரன் புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷ வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. புதிய ஆட்சியை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- புதிய ஜனாதிபதி, புதிய ஆட்சியில் நாட்டைப் பொறுப்பேற்று ஆண்டொன்று நிறைவடைந்துள்ளது. எமது மோசடிகளை தேடுவதாக கூறிக்கொண்டு உள்நாடு, வெளிநாடுகளுக்கு சுற்றுலாக்களையே மேற்கொண்டிருக்கின்றார்கள். சர்வதேச வங்கிக்கணக்குகள் இருக்கின்றன, நபர்களை கொலை செய்திருக்கின்றார்கள், மோசடி செய்திருக்கின்றார்கள் என்றுகூறிக்கொண்டே இருக்கின்றார்கள். இதுவரையில் எதனையும் நிரூபிக்கவுமில்லை. அவர்களுக்கு எதுவும் கிடைக்கவுமில்லை. மறுபக்கத் தில் பொதுமக்களுக்காக எதனையும் செய்யவுமில்லை.
கேள்வி:- உங்கள் மீதும் உங்களுடைய குடும்பத்தினர் மீதும் ஊழல்மோசடி உட்பட பல நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனவே?
பதில்:- ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார்கள். தங்கக்குவியல், லம்போஹனி வாகனங்கள் பங்களாக்கள், ஹெலிகொப்டர்கள்,விமானங்கள் போன்றவை எம்மிடம் இருப்பதாக கூறினார்கள். எமது வீட்டுக்கு வந்து தேடுதல்களை நடத்தினார்கள். இன்றும் அவ்வாறு கூறிக்கொண்டேயிருக்கின்றார்கள். எதனையும் கண்டறியவில்லையே.
முதலில் பசில் ராஜபக்ஷவை சிறையிலிட்டார்கள்.அதன் பின்னர் அப்பாவின்(மஹிந்த ராஜபக் ஷ) பின் னால் வந்தார்கள். அம்மாவின் மீது குற்றம்சாட்டினார்கள். கோத்தபாய ராஜபக் ஷ மீதும் குற்றம்சாட்டினார்கள். இறுதியில் என்மீதும் சகோதரர்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். ஊழல்மோசடி ஆணைக்குழு உட்பட பல தரப்புக்களிலிருந்து விசாரணைக்காக கடிதங்களை அனுப்பி விசாரணைகளை மேற்கொள்கின்றார்கள். இன்றுவரையில் எதனையும் உறுதிப்படுத்தவில்லை. எம்மை குற்றவாளிகளாக அடையாளம் காண்பதற்குரிய சாட்சியங்கள் அவர்களிடத்தில் இல்லை.
தேர்தல் காலத்தில் இவ்வாறான விடயங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள். எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களையே சுமத்தியிருக்கின்றார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு எம்மை விசாரணைக்காக கொண்டு செல்வதால் எந்தபயனும் ஏற்படப்போவதில்லை. இவ்வாறு விசாரணைக்காக அழைக்கப்படுவதானது சிறந்ததொரு செயற்பாடாகும். ஈற்றில் பொதுமக்களுக்கு இவை அனைத்துமே தொலைக்காட்சியில் பார்க்கும் நாடகங்கள் போன்றேயிருக்கும். நாம் எந்தத்தவறும் இழைக்காத அப்பாவிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ நித்திரை வராமைக்காக எம்மை சிறையிலடைக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு வழங்கவேண்டியவற்றை வழங்குங்கள். அதற்காக நாம் சிறைக்கு செல்லவேண்டுமானால் அதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.
அதேநேரம் மறுபக்கத்தில் திருடர்கள், குடும்ப ஆட்சியாளர்களென்ற பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு ஏனையோரும் திசைதிருப்பப்பட்டார்கள். இந்த சதிக்குள் சிக்குண்டு வாக்களித்தவர்கள் இன்று அதனை உணர்ந்துள்ளார்கள். குறிப்பாக அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் உள்ளார். நான் பெயரைக்குறிப்பிட முன்வரவில்லை.
அன்று இனவாதிகளாக செயற்பட்டவர்கள் இன்று அமைச்சரவையில் இருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் தான் சிறுபான்மையினருக்கு உரிய இடம் வழங்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதி தலைவராக கருணா நியமிக்கப்பட்டார். இன்று தேசிய பட்டியலில் அங்கஜன் இராமநாதன் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். வடகிழக்கு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கேள்வி:- யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தபோதும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் மகிந்த ராஜபக் ஷ அரசாங்கம் தோல் வியடைந்து விட்டமையை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்திருந்த மஹிந்த ராஜபக் ஷ நல்லிணக்க செயற்பாடுகளையும் அதிகளவில் முன்னெடுத்திருந்தார். தற்போது அவை முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவ்விதமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பதில்:- ஆம், மக்களுக்கு உண்பதற்கு உணவில்லாது நட்புறவு கொள்ளுங்கள் எனக் கூறமுடியாது. நல்லிணக்கத்தின் முதற்படியாக காணப்படுவது உட்கட்டமைப்பு அபிவிருத்தி அவற்றை நாம் முறையாக முன்னெடுத்தோம். யுத்தத்தை நிறைவுக்குகொண்டு வந்த மஹிந்த ராஜபக் ஷ நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான வழியை அமைத்தார். அதுமட்டுமன்றி யுத்த தள வாடங்கள்இ நிலக்கண்ணிவெடிகள் போன்றவை அகற்றப்பட்டன. தொலைத்தொடர்பு வசதிகள் உட்பட அனைத்தும் வழங்கப்பட்டன. இதன் பின்னரே நட்புறவு கொள்ளமுடியும். அனைத்துமே உடைந்து நொறுங்கிய நிலையில் இருக்கும்போது எவ்வாறு நட்புறவுகொள்ளுங்கள் எனக் கூறமுடியும்.
நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் ஊடாக இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கட்சிகளுக்கிடையில் நல்லிணக்கம் காணப்படவில்லை. குறிப்பாக கூறுவதானால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் நல்லிணக்கம் காணப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகி விக்கினேஸ்வரன் வேறாக அமைப்பை உருவாக்கியுள்ளார். சம்பந்தனும் குழுவினரும் வேறாக உள்ளனர். டக்ளஸ் தேவானந்தா வேறாக உள்ளார். நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதாயின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரும் தமிழ் கட்சிகளுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும். ஒன்றுபட்ட நிலைப்பாட்டுக்கு அவை வரவேண்டும்.
Post a Comment